இந்தப் பட்டத்தில் டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.
டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.
விதை நேர்த்தி:
ஏக்கருக்கு 2 கிலோ விதையினை 1.5 லிட்டர் நீரில் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாத்திரத்தினை மூடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை விதையை நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் எஞ்சியுள்ள நீரை வடிகட்டிவிட்டு, நிழலில் சாக்குகளை விரித்து விதைகளை உலர்த்தி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிட்டு 15 மணி நேரம் வைக்க வேண்டும்.
இந்த விதையுடன் 8 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான உரத்தை கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.
விதைப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பூஞ்சான விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையுடன், உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் ஆடையினை நீக்கிவிட்டு இதில் மேற்குறிப்பிட்ட 2 பொட்டலங்களையும் நன்கு கலக்க வேண்டும். இக்கலவையினை விதையுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
நிலம் தயார் செய்தல்:
நிலத்தினை ஏர் கலப்பை கொண்டு 5 முதல் 6 முறை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அவசியம் இடவேண்டும். மேலும் தேவையான அடியுரம், 80 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.
விதைப்பு:
விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணலை கலந்து சீராக குறுக்கும் நெடுக்குமாக விதைக்க வேண்டும்.
விதைத்தபின் படல் கொண்டு இழுத்து விதைகளை மூடவேண்டும். பின்னர் சரிவின் குறுக்கே வாய்க்கால்களும், பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளும் அமைக்க வேண்டும். எள் பயிருக்கு உரமிடுதல் மிக அவசியமானது.
உரமிடுதல்:
மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையறிந்து உரமிடுவதால் மட்டுமே உரச்செலவை குறைத்து உர விரயத்தை தவிர்த்து, உயர் மகசூல் பெற இயலும். மண் பரிசோதனை மேற்கொள்ள இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை இடலாம்.
களை மேலாண்மை:
விதைத்த முதல் 30 நாள்களுக்கு களையின்றி வயலை பராமரிப்பதால் மட்டுமே கால் பங்கு மகசூல் கூடுதலாகப் பெறலாம். விதைத்த 3ஆம் நாள் தண்ணீர் பாய்ச்சியவுடன் மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்கும் போது ஏக்கருக்கு 1.6 லிட்டர் ஆலாகுளோர் என்னும் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்து களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தலாம்.
விதைத்த 20ஆம் நாள் நீர்ப் பாய்ச்சி மேலுரமிட்டு பயிர் கலைத்தலை மேற்கொள்ளும்பொழுது, இருக்கும் களைகளை எடுத்துவிடவேண்டும்.
நீர்ப் பாசனம்:
பொதுவாக மாலை 5 மணியளவில் செடி வாட்டமாகக் காணப்பட்டால் உடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மாசிப்பட்ட எள் சாகுபடியைப் பொறுத்தவரை 5 நீர்ப்பாசனங்கள் தேவைப்படும். இவை முறையே, விதைத்த முதல் நாள், 20-25ஆம் நாள், 35-40ஆம் நாள், 50-55ஆம் நாள் மற்றும் 65ஆம் நாள் ஆகும்.
வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:
ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தினை 12 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய 2 கிலோ டிஏபி கரைசலுடன் 200 லிட்டர் நல்ல தண்ணீர் கலந்து விதைத்த 25, 45 மற்றும் 60ஆம் நாள்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் தன்மை அதிகமாகும்.
பயிர் பாதுகாப்பு:
எள் பயிரை கொண்டைப்புழு, எள் குடையான், எள் காய் ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை தாக்கி சேதம் விளைவிக்கும். மேலும் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் போன்றவையும் எள் பயிரை தாக்கும்.
இறவை எள்பயிரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படத் தொடங்கியவுடன் பொருளாதார சேத நிலையினை கணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாள்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.
பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் உடன் அருகிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மையங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஒட்டுண்ணியினை இலவசமாகப் பெற்று கட்டுப்படுத்தலாம்.
அறுவடை:
ரகத்தைப் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும். தண்டு மஞ்சள் நிறமாக மாறுவதும் கீழ்பகுதியிலிருந்து எட்டாவது காய்களில் உள்ள விதைகள் நிறம் மாறத் துவங்குவதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அறுவடை செய்யப்பட்ட செடியின் முன்பகுதி உட்புறமாகவும், அடிப்பகுதி வெளிப்புறமாகவும் உள்ளவாறு வட்ட வடிவமாக செடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வர வேண்டும். இவ்வாறு அடுக்கும்போது, வேப்பங்கொட்டைத்தூளை தூவி வருவதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம். பின்னர், வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.
போரினை 3 நாள்களுக்குப்பின் பிரித்து செடிகளை உதறி, கிடைக்கும் எள்ளை தனியாக சேகரிக்க வேண்டும். பின்னர், செடிகளை வெயிலில் உலர்த்தி அடுத்த 2 நாள்களுக்கு உலுக்கி கிடைக்கும் எள்ளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். இவ்விதைகளை தனித்தனியாக 7 முதல் 8 சதவீத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.
இந்த தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் எள் சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம் என்றனர்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.
துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் முனைவர் முரு. ராமநாதன், பேராசிரியர் சு. ராஜேந்திரன்