மாமரத்தில் பூவை பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும்

மாமரம் பூத்துக் குலுங்க தொடங்கி உள்ளது (கடந்த மழையில் உதிர்ந்து கொட்டி நஷ்டத்தை ஏற்படுத்தியவை தவிற!). பூவில் மகரந்தச் சேர்க்கை நடந்த பின்னர் பிஞ்சு விட்டு அது காயாகப் பெரிதாகி தொங்கும். பழமாகப் பழுக்கும் வரை பொறுமை இல்லாதவர்கள் காயாகவே பறித்து ரசாயன கலவையைப்  போட்டு அதைப் பழுக்க வைத்து மார்க்கெட்டுக்கு அனுப்பி விற்பனை செய்கின்றனர்.

ருசியின் காரணமாக “மா” பழங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மாவில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை பழமும் தனி ருசி உடையவை. இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரையில் பழம் கிடைக்கும். இப்போது மாம்பூவைச் சரியாகப் பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும்.

பூ பூக்கும் நேரத்தில் பூ பிணைக்கும் புழு தாக்குதல் காணப்படும். இந்தப் புழு பூ அருகே வலை போன்று உருவாக்கி பூவைச் சாப்பிடும். இதனால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. மகசூல் பாதிக்கும்.

எல்லாப் பூக்களும் உதிராமல் பாதுகாக்க வேண்டும். மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டும். அந்தச் சூழ்நிலை ஏற்பட்டால் மகசூல் அதிகரிக்கும்.

பூ பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த கியூரா கிரான் பூச்சி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது மெதுவாகச் செய்ய வேண்டும்.

வேகமாக தெளிப்பானைப் பயன்படுத்தினால் பூ உதிர்ந்துவிடும். 3 வயது வரை உள்ள ஒரு மரத்துக்கு 5 லிட்டர் அளவு தேவைப்படும். 3 முதல் 15 வயது வரை உள்ள மரத்துக்கு 10 லிட்டர் தேவைப்படும். அதற்கு மேல் உள்ள மரத்துக்கு 25 லிட்டர் தேவைப்படும்.

பூ கருகுவதைக் கட்டுப்படுத்த என்டோ சல்பான் 35 இசி என்ற மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவிலும் அதனுடன் கார்பன்டைசைம் என்ற பூஞ்சான மருந்தை 2 கிராம் வீதம் 1 லிட்டர் நீரில் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும். மா பூத்திருந்தால் நாப்தலின் அசிட்டிக் அமிலம் 20 பிபிஎம் என்ற அளவில் தெளிப்பதால் பூ உதிராமல் தடுக்கப்படும்.

அதனால் ஒவ்வொரு பூவிலிருந்தும் மா பிஞ்சு உருவாகும். மா மரத்தில் தண்டுப் பகுதி, கிளைப் பகுதியை தத்துப்பூச்சி சாறு உறிஞ்சும். இதுவும் மகசூல் பாதிக்கக் காரணமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த அசிபேட் 75 எஸ்பி என்ற கரையும் பவுடரை 1 கிராம் அளவுக்கு எடுத்து 1 லிட்டர் நீரில்  கலந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் கார்பரைல் பூச்சி மருந்து 50 டபிள்யூபி என்ற பவுடரை 2 கிராம் அளவுடன் 1 லிட்டர் நீர் வீதம் கலக்க வேண்டும். இந்த இரண்டு கலவையும் ஒன்றாகக் கலந்து பூ, தண்டு, கிளைகளில் தெளிக்க வேண்டும்.

இதனால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். ÷இரண்டு நாள் இடைவெளியில் நனையும் கந்தகம் 1 லிட்டர் நீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் தத்துப்பூச்சி தாக்குதல் மேலும் குறையும். ÷பொட்டாஷியம் நைட்ரேட் ரசாயன கலவையை 1 லிட்டர் நீரில் 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். ÷இதனால் பூ பூக்காத மரங்கள் பூ எடுக்கும். பூ சிறியதாக இருந்தால் அதைப் பெரிதாக்க பொட்டாஷியம் நைட்ரேட் ரசாயன கலவையை 1 லிட்டர் நீரில் 20 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.

தினமணி தகவல் – என். விஜயகுமார், பூச்சியியல் வல்லுநர், பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், புதுச்சேரி

Leave a comment