பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து – மீள்பதிவு

மீள்பதிவு http://www.badriseshadri.in/2012/09/blog-post_7619.html

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.

இன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்டு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.

தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.

வெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.

இன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

அரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும்.

வளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.

இதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் – இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை – மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.

 

முட்டை பொரிக்கும் கருவி

அடைகாத்தல்:
வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சுபொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப்பானின் உள்வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 – 100.5 டிகிரி பாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். நவீன அடைகாப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கரு வளர்நிலை காண வேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்க பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில்தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்துவிட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்துகொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். கோழியின் வம்சாவளியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்க வேண்டும்.

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து, ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்ய வேண்டும். நன்கு கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இது நோய் பரவலின் தன்மையைக் குறைக்கும்.

தினமலர் தகவல்
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா,
தாராபுரம், 89037 57427.

தொகுப்பு: கால்நடை வளர்ப்பு

நன்னீர் முத்து வளர்ப்பு

முத்து என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய விலை உயர்ந்த பொருள் (ரத்தினம், மாணிக்கம் போன்றது). இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முத்துக்கு தேவை அதிகம். அளவுக்கு மீறின பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் இயற்கையில் முத்து கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளர்ப்பு முத்துக்களை இறக்குமதி செய்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்துவருகிறது.

புவனேஷ்வரிலுள்ள மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் – நன்னீரில் முத்து வளர்ப்பது குறித்த தொழில்நுட்பத்தை உருவாக்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது.

இயற்கையில் வெளியிடத்துப் பொருள் ஒன்று அதாவது, மண் துகள், பூச்சிகள் போன்றவை, சிப்பி உடம்பினுள் சென்று, வெளிவராமல் இருக்க, சிப்பியானது அவ்வெளிப் பொருளின் மேல் ஒரு பளபளப்பான பகுதியை உருவாக்குகிறது. இதனால் முத்து உருவாகிறது. இதுதான் முத்து வளர்ப்பிலும் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும்.

முத்து என்பது, சிப்பியின் உள் ஓட்டுக்குள் காணப்படும் பளபளப்பான பகுதிக்கு இணையானது. இதனை முத்துப் பகுதிகளின் தாய் என்றும் அழைப்பர். இது கால்சியம் கார்பனேட், இயற்கையான மேட்ரிக்ஸ், தண்ணீர் ஆகிய கலவையில் உருவானது. கடைகளில் கிடைக்கும் முத்துக்கள், இயற்கையில் கிடைப்பவையாக இருக்கும் அல்லது செயற்கையில் செய்தவை அல்லது வளர்த்து கிடைத்தவையாக இருக்கும்.

செயற்கை முத்துக்கள் அல்லது முத்துக்கள் போன்று இருப்பவை எல்லாம் முத்துக்கள் அல்ல. செயற்கை முத்துக்கள் என்பது தடிமனான, வட்டமான அடிப்பகுதியுடைய, வெளிப்புறத்தில் முத்து போன்று பளபளப்பாக முலாம் பூசப்பட்டு இருக்கும். இயற்கை முத்துக்களில் உள்கரு சிறியதாக இருக்கும்.

பொதுவாக இயற்கையில் கிடைக்கும் முத்து சிறியதாக இருக்கும். வடிவம் வித்தியாசமாக காணப்படும். வளர்க்கப் படும் முத்துக்களும் இயற்கையான முத்துக்கள் போலத்தான். ஒரே வித்தியாசம் மனிதனின் முயற்சியால் உட்கருவை சிப்பிக்குள் புகுத்தி, நமக்கு தேவையான அளவு, வடிவம், நிறம், அழுத்தமுடைய முத்துக்களை உருவாக்குகிறோம். இந்தியாவில் கிடைக்கும் முத்துக்களை உருவாக்கும் மூன்று வகையான நன்னீர் சிப்பிகள் ஆவன

  • லேமல்லிடன்ஸ் மார்ஜினாலிஸ்,
  • லே கோரியான்ஸ்,
  • பேரிசியா காருகேட்டா.

வளர்ப்பு முறைகள்:

நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப் படுகிறது. அவையாவன; சிப்பிகள் சேகரிப்பது, வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல், அறுவை சிகிச்சை, வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல், குளத்தில் வளர்ப்பு, முத்துக்களை அறுவடை செய்தல்.

நன்னீர் முத்து வளர்ப்பு பொருளா தாரம்: அலங்கரிக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட முத்து என்பது பழைய முறையாக இருந்தாலும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளின் படி மதிப்பு மிக்கவையாகவே இருக்கின்றன. நிகர வருமானம் ரூ.2.177 லட்சம்/ ஒரு ஏக்கருக்கு / காலம் 1.5 வருடம்.

தினமலர் தகவல்
ஆர்.ஜி.ரீஹானா,
அக்ரி கிளினிக், தாராபுரம்.

தொகுப்பு – கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.

கரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும். வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும். இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது. இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.

சில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும். இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. படத்தில் உள்ளவாறு இருக்கும் கருவியைக் கொண்டு இளங்கரும்புப் பயிரின் தாய்ப்பயிரை ஆட்களின் உதவியால் அறுத்துவிடலாம். இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம். நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம். அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.

அதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும். பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.

தினமலர் தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில் TNAU: http://www.market.grassfield.org/Tamil%20Nadu%20Agricultural%20University/vendorDetail/65.html

கூட்டு மீன் வளர்ப்பில் விரால்

மீன் வளர்ப்பு குளமொன்றில் குளத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான பல்வேறு பகுதிகளிலும் பரவி அப்பகுதிகளில் இருக்கும் பலவகையான உணவினங்களை தமது உணவுப் பழக்கத்திற்கேற்ப உண்டு, இடத்திற்கும் உணவிற்கும் போட்டியில்லாமலும் சண்டையில்லாமலும் கூடி வாழ்ந்து நன்கு வளர்ந்து உயர்வான உற்பத்தியைத் தரக்கூடிய வேக வளர்ச்சிக் கெண்டைகளான கட்லா (நீரின் மேற்பரப்பு), வெள்ளிக்கெண்டை (நீரின் மேற்பரப்பு), ரோகு (நீரின் நடுமட்டம்), மிக்கால் (நீரின் அடிமட்டம்), சாதாக்கெண்டை (நீரின் அடிமட்டம்), புல்கெண்டை (குளத்தின் கரையோரப்பகுதி), வெள்ளிக்கெண்டை ஆகிய கெண்டைமீன்களை உயிரியல் சூழல் மற்றும் வளர்ப்பியலுக்கு உரிய இன விகிதாச்சாரப்படி சரியாக இருப்பு அடர்த்தியில் இருப்புச்செய்து வளர்ப்பது கூட்டுமீன் வளர்ப்பாகும்.

கூட்டுமீன் வளர்ப்புக் குளத்தில் புதிய மீன் இனங்களைச் சேர்த்து வளர்க்கையில் ஏற்கனவே உள்ள மீனினங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. கெண்டை, பால்மீன், நன்னீர் இரால் மற்றும் விரால் ஆகியவை கூடுதலாகச் சேர்த்து வளர்க்கலாம். புதிய மீன் இனங்களைச் சேர்க்கும்போது அவற்றுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்பதை அதற்கான மீன்வளர்ப்பு அறிவியல் அறிஞரே வழிகாட்டவேண்டும்.

விரால்களைச் சேர்த்து வளர்ப்பதால் பல பலன்கள் உண்டு. விரால்களை வளர்ப்பதற்கு தனியான வசதி (குளம்) இல்லாதபோது கூட்டு மீன்வளர்ப்பு குளத்தில் விரால்களைக் கெண்டைகளோடு சேர்த்து வளர்த்து பயன்பெறலாம். விரால்கள் மற்ற வளர்ப்பு மீன்களுடன் உணவுக்காக போட்டியிடுவதில்லை. விரால்களுக்கு விசேட சுவாச உறுப்புகள் உண்டு. தோலாலும் சுவாசிக்கும். வெளிமடைக் காற்றையும் சுவாசிக்கும். சில பயனற்ற, சிறிய நாட்டுக்கெண்டைகள் மற்றும் களை மீன்களை விரால்மீன்கள் உண்டு அழித்துவிடும். எனவே களை மீன்களால் உணவு வீணாவது தடுக்கப்பட்டுக் கெண்டை மீன்களுக்கான தீனி, கெண்டைகளுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

கெண்டை மீன்களின் உற்பத்தியோடு விரால் மீனின் உற்பத்தியும் குளத்தின் உற்பத்தியாகச் சேர்ந்து கிடைப்பதால் குளத்தின் மொத்த மீன் உற்பத்தியும் லாபமும் அதிகமாக இருக்கும். கூட்டுமீன் வளர்ப்பில் இருப்புச் செய்யப்படும் மீன்களுள் 2-5 சதம் மட்டும்விரால் மீன்களை இருப்புச் செய்தால் போதுமானது.

விரால்களுக்கு அவற்றுக்குத் தேவையான மாமிச உணவுகளையும் தருவதாயின் அவற்றின் இருப்பளவு 2 சதவீதத்துக்கு மேல் இருக்கலாம் (5 சதவீதத்திற்குள்). இல்லையேல் இருப்பளவு குறைவாகவே இருக்க வேண்டும்.

கெண்டை மீன்களை குறைந்தது 150-200 கிராம் அளவுவரை வளர்த்த பின்னரே விரால் குஞ்சுகளை அல்லது ஓரளவு வளர்ந்த விரால்களை கெண்டைகளின் குளத்தில் இருப்புச் செய்யவேண்டும். இதில் கவனக்குறைவு ஏற்பட்டால் விரால் மீன்கள் கெண்டைகளையும் தின்று தீர்த்துவிடும்.

இம்முறைப்படி கெண்டைகளின் வளர்ப்புக்காலம் முழுமையாகவும் (அதிகமாகவும்) விரால்களின் வளர்ப்புக்காலம் குறைவாகவும் இருக்கும். அதாவது விரால்கள் அறுவடைக்கான முழு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. இக்குறைபாட்டைத் தவிர்க்க, கெண்டை குஞ்சுகளை தனிக்கவனமுடன் சிறப்பாக வளர்த்து, ஒவ்வொன்றும் 150 கிராமுக்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் கெண்டைகளையும் விரால் குஞ்சுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இருப்புச் செய்யலாம். கெண்டைகள் ஏற்கனவே ஓரளவு (தப்பித்துக்கொள்ளும்மட்டில்) வளர்த்துவிட்டபடியால் விரால்களால் அவற்றுக்கு ஆபத்துவராது.

ஒரு எக்டர் குளத்தில் அதிகபட்சமாக 10,000 மீன்களை (சதுர மீட்டருக்கு ஒன்று) இருப்புச் செய்வதாகக் கொண்டால் அதில் விரால் மீன்களை 2 சதம் மட்டும் இருப்புச் செய்வதாகக் கொண்டால், ஒரு எக்டர் குளத்தில் 200 விரால்களை விளர விடமுடியும். வளர்ப்புக் காலத்தில் ஒவ்வொரு விராலும் ஒரு கிலோ வளர்வதாகக் கொண்டால் (சிறப்புத் தீனியும் தந்து) மொத்தம் 200 கிலோ உற்பத்தி கிடைக்கும். விரால்களை குறைந்தது கிலோ 200 ரூபாய்க்கு (உயிருடன்) விற்கலாம். விரால்களால் மட்டும் ரூ.40,000 வருமானம் கிட்டும்.

(தினமலர் தகவல்:
டாக்டர் வெ.சுந்தரராஜ், 90030 13634,
செ.பெரியசாமி, 94431 38573)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

வேளாண் அரங்கம் மாரக்கெட்டில் கால்நடைப் பொருட்கள் : http://www.market.grassfield.org/index.php?q=itemList&categoryId=33