ஜப்பான் காடைக்குத் தடை – மத்திய அரசின் அடுத்த அதிரடி

ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் கூறியுள்ளோம். அது தவிற அகில இந்திய வானொலியின் பதிவையும் அதில் கொடுத்திருந்தோம். விவசாயம் பொய்த்துப் போகும் சூழ்நிலைகளில், விவசாயிகளுக்குக் கைகொடுப்பது… கால்நடை வளர்ப்புதான். ஆடு, மாடு, பன்றி, முயல், கோழி, காடை…. இப்படி பிடித்தமான கால்நடைகளை வளர்த்து காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளனர் விவசாயிகள். அந்த வகையில், தமிழகத்தில் காடைப் பண்ணைகள் நிறையவே இருக்கின்றன. இங்கெல்லாம் ‘ஜப்பான் காடை’ என்கிற இனம்தான் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.

இறைச்சிக்காக மட்டுமே காடைகள் வளர்க்கப்படும் நிலையில், ‘ஜப்பான் காடை, பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இணைக்கப்படுகிறது. அதைக் கொல்வதோ… வேட்டையாடுவதோ… தண்டனைக்குரியக் குற்றம். காடைப் பண்ணைகள் அமைக்கவும் மாநில அரசுகள் அனுமதி வழங்கக்கூடாது’ என்று அதிரடியாக அறிவித்து, விவசாயிகளை அலற வைத்துள்ளது மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் முத்துசாமி, ”குறைஞ்ச இடவசதி, குறைஞ்ச முதலீடு, குறுகிய காலத்துலயே வருமானம்… இதெல்லாம்தான் ஆயிரக்கணக்கான விவசாயிகள ஜப்பானியக் காடை வளர்ப்புல இறக்கி விட்டிருக்கறதுக்குக் காரணம்.

இந்தக் காடைகள பெருசா நோய் தாக்குறது இல்லை. அதனால பராமரிப்பும் பெருசா தேவைப்படாது. விற்பனையிலயும் பிரச்னை இருக்கறதில்ல. 1,000 காடை வளர்த்தா… ஒரு மாசத்துல

10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த நிலையில ஜப்பான் காடைக்குத் தடை போட்டிருக்கறது… விவசாயிகளோட வாழ்வாதாரத்தையே பறிச்ச மாதிரிதான்” என்று பொறுமினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். பிரபாகரனிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஏற்கெனவே இருக்கும் பண்ணையாளர்கள், பீதியடையத் தேவையில்லை. புதிதாக பண்ணை அமைப்பதற்கும், தற்பொழுது இருக்கும் ஜப்பானியக் காடைகளின் அளவை அதிகப்படுத்துவதற்கும்தான் தடை செய்திருக்கிறார்கள்.

தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை ரகங்கள், 1972-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆராய்ச்சி மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டவை. அவை காடுகளில் இருந்து கொண்டு வரப்படவில்லை.

இந்தக் காரணத்தை வைத்தே, தடையை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். மத்திய வனத்துறை அமைச்சகத்துக்கு தேவையான தகவல்களை அனுப்பி தெளிவுபடுத்தி, தடையை விலக்க வைப்போம்” என்று சொன்னார்.

Leave a comment