மரங்கள் நடவும், உரங்கள் இடவும் ஏற்ற தருணம்

பருவமழை தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

பழ மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பது சுற்றுச்சூழல் மாசையும் நீக்கி, சுவையான சத்தான கனிகளையும் தருகின்றன. இப்போது மழை பெய்து வருவதால் பழ மரங்களை நடவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள பழ மரங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதற்கும் இதுவே உகந்த தருணம்.

மா நடவு முறைகள்:

வரிசைக்கு வரிசை 7-10 மீ., செடிக்குச் செடி 7- 10 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

மா உர நிர்வாகம்:

முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.

ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இருமுறையாகப் பிரித்து இடலாம்.

நெல்லி நடவு முறைகள்:

வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். 2 அடி ஆழம், 2 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

நெல்லி உர நிர்வாகம்:

நான்காமாண்டு காய்க்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், ஒன்றரை கிலோ யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.

காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறம் கலந்து காணப்படுவது போரான்சத்து பற்றாக்குறையாகும். 100 லிட்டர் நீரில் 600 கிராம் போராக்ஸ் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளித்து இந்தக் குறைபாட்டை நீக்கலாம்.

சப்போட்டா நடவு:

வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 8 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 4 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

சப்போட்டா உர நிர்வாகம்:

முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.

ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இரு முறையாகப் பிரித்து இடலாம்.

எலுமிச்சை நடவு:

வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலம் என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, இட்டு நடவு செய்ய வேண்டும்.

எலுமிச்சை உர அளவு:

முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாகச் சேர்த்து இடவேண்டும்.

ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 30 கிலோ தொழு உரம், 1350 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.

இவ்வாறு இடும் உரங்களில் யூரியாவை மட்டும் மார்ச்சிலும், அக்டோபரிலும் பாதிப்பாதியாக பிரித்து வைக்க வேண்டும். எஞ்சிய உரங்களான தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை அக்டோபரில் மட்டும் வைக்க வேண்டும்.

கொய்யா நடவு:

வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ., இடைவெளியில் நடவு செய்யலாம்.

ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, கொய்யா பதியன் கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

கொய்யா உர நிர்வாகம்:

காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒன்றே முக்கால் கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.

கொய்யாவில் மகசூலை மேம்படுத்த ஒரு சதவீதம் யூரியா (ஒரு லிட்டர் நீருக்கும் 10 கிராம் யூரியா) மற்றும் அரை சதம் துத்தநாக சல்பேட் (ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கலந்த கரைசலை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.

பழ மரக்கன்றுகளை ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி ஒன்று நட்டு தளர்வாகக் கட்டிவிட வேண்டும். உரங்களை மரத்தில் இருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப் பரப்புக்குள் அரைவட்டமாக ஒரு அடி ஆழக்குழி எடுத்து வைத்து மூடலாம் என்றார் அவர்.

தினமணி தகவல் :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சு.பாலசுப்பிரமணியன்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

TNAU: நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

தமிழகத்தில் நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக நடத்திய பூச்சி, நோய் ஆய்வின்படி டிசம்பர் மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் வெளியிடப்படுகிறது.

நெல் :

நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பரவலாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் மற்றும் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். அந்துப் பூச்சி அதிகமாக காணப்பட்டால் – டிரைகோகிராம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் வயலில் விடவும்.

இலை சுருட்டு

இலை சுருட்டு

பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரசாயன பூச்சிக் கொல்லி குளோர்பைரிபாஸ் 2.5 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அ) பிரப்பனோபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்றளவில் கலந்து தெளிக்கவும். நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் திருவாரூர் மாவட்டத்தில் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் தட்பவெட்ப நிலை சாதகமாக இருந்ததாலும் நெற்பயிரினில் நெல்குலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில் டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாட்கள் இடை வெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சும் பூச்சி

சாறு உறிஞ்சும் பூச்சி

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காய் புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

சிவகங்கை, தஞ்சை, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுபடுத்த டிரைக்கோகிராம்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தவும்.

நிலக்கடலை:

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலைகளைத் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் விட்டு கட்டுப்படுத்தவும்.

மேலும், விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி 0422- 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பழ மரங்களுக்கான தொழில் நுட்பங்கள்

பல்வேறு பழ மரங்களுக்கான டிப்ஸ்களை போடி தோட்டக்கலை இயக்குநர் தொகுத்துள்ளார்.

மா மரம்:

ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.

மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.

கொய்யா:

கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும். வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூக்கள் அதிகம் பிடிக்க 1 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மேல் வளரும் குச்சிகளை வளைத்து கற்களை கட்டித் தொங்கவிடுவதன் மூலம் காய்ப்புத் திறனை அதிகரிக்கலாம். கொய்யாவில் விதைகள் அதிகம் தோன்றுவதை தடுக்க ஜிப்ரலிக் அமிலம் 1 கிராம் 10 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுகள் தோன்ற ஆரம்பித்த உடன் கைத்தெளிப்பானால் ஒருமுறை தெளித்தால் விதைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

சப்போட்டா:

சப்போட்டாவில் காய்கள் பிடிப்பதை அதிகரிக்க போரிக் அமிலம் 1 சதவீதக் கரைசலை தெளிக்க வேண்டும். சப்போட்டா கன்றுகளில் வேர்ச்செடியிலிருந்து வரும் துளிர்களையும், நீர் போத்துக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும். தரை மட்டத்திலிருந்து வளரும் பக்க கிளைகளை நீக்க வேண்டும். சப்போட்டாவில் ஒரே ரகமாக நடாமல் பல ரகங்களை கலந்து நடவு செய்தால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். காய்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.

நெல்லி:

நெல்லி கன்றுகளில் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்கு பக்க கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பின்பு பக்க கிளைகள் எதிரெதிர் திசைகளில் அனுமதித்தல் வேண்டும். ஒட்டுக்கு கீழே வளரும் கிளைகளை தொடர்ந்து நீக்கிவிடவேண்டும். நோய்வாய்ப்பட்ட உடைந்த மற்றும் குறுக்கே செல்லும் கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

எலுமிச்சை:

பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும். காய்ந்த கிளைகளை அகற்றி கார்பன்டசிம் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

முந்திரி:

ஒட்டுக்கன்றுகளை நட்ட பின் வேர்செடிகளில் துளிர்த்து வரும் மொட்டுகளை அவ்வப்போது கிள்ளி எடுத்துவிடவேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு கன்றுகளில் 2 மீட்டர் உயரம் வரை தோன்றும் பக்க கிளைகளை வெட்டி செடி நேராக உயரமாக வளர வகை செய்ய வேண்டும். வெட்டி எடுத்த பகுதிகளில் பூஞ்சாணமருந்து பூசிவிட வேண்டும். கன்று நட்ட முதல் 2 ஆண்டுக்கு பூங்கொத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்துதான் காய்பிடிக்க விடவேண்டும்.

மாதுளை:

காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம். திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்

தினமணி செய்தி – போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ்